காய்த்துக் கனிகிறேன் என்றால்
வேராய் இருப்பது
என்மொழி.
பறவையொன்றாய்ச் சிறகசைத்து
வானமளந்து நீலம் குடிக்கிறேன் என்றால்
இறகாய் இருப்பவை
என் எழுத்துகள்.
மரக்கலமொன்றாய் கடலளந்து
பூமிப்பந்தின் ஆழமளந்து
அலையாய் ஆர்ப்பரிக்கிறேன் என்றால்
காற்றாய் இருப்பவை
என் வார்த்தைகள்.
ஏழுகடல் ஏழுமலை தாண்டி
உயிர் சுமக்கும் கிளியை
ஊருக்குக் காட்டுகிறேன் என்றால்
வாகனமாய் இருப்பவை
என் கதைகள்.
வலி பொறுத்து
சிரிப்பதாய் நடிக்கச் சொல்லும்
வாழ்வின் முன்னே
காயங்களற்று உயிர்த்தெழும் எனக்கு
மந்திர மருந்தாய் இருப்பவை
என் இலக்கியங்கள்.
இசைத்துத் தீர்க்க முடியாத
என் மொழியின் சுரங்கள்
ஆலாபனைகளாய் காற்றில்.
பேசித் தீர்க்க முடியாத
என் மொழியின் எழுத்துகள்
புதுரத்தமாய்ப் பொங்கும் தொப்புள்கொடிகளில்
மொழிக்காடாய்
அடர்ந்திருக்கும் என்னிலிருந்து
காட்டாறாய்ப் பிரவகிக்கின்றன
மொழியின் புதுமைகள்.
மொழியிலிருந்து கிளைத்தவள் நான்
மொழியானவள் நான்.